அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளையகமான CENTCOM வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கர்கள் கொல்லப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, எந்தவிதமான மன்னிப்பும் இன்றி தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதேவேளை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு ஆர்வமம் கிடையாது எனவும், அந்த நாட்டின் இராணுவமும் தலைமையும் முற்றிலும் செயலிழக்கும் வரை போர் தொடரக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு, இராணுவம் அழிக்கப்பட்டால் பேச்சுவார்த்தை தேவையற்றதாகிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் இந்த கருத்துக்கள் எதிர்கால நிலவரம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.