கதிரியக்கவியல் நிபுணர் வைத்தியர் சுந்தரலிங்கம் ரிலக்குமார் அவர்களின் இடமாற்றத்திற்கான கௌரவிப்பு நிகழ்வுகளில் இருந்து  நீங்காத நினைவுகளாக…..

கதிரியக்கவியல் நிபுணர் வைத்தியர் சுந்தரலிங்கம் ரிலக்குமார் அவர்களின் இடமாற்றத்திற்கான கௌரவிப்பு நிகழ்வுகளில் இருந்து  நீங்காத நினைவுகளாக…..

தொகுப்பு ” kalmunainet” ஊடக வலையமைப்பு

 

“தோன்றில் புகழொடு தோன்றுக

அஃதிலார், தோன்றலில் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவரின் வாக்கை எமக்கு நினைவுபடுத்தி சென்ற கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் சுந்தரலிங்கம் ரிலக்குமார் அவர்கள்,

இளமையில் ஓர் சிறந்த விளையாட்டு வீரராகவும், கல்வியில் முன்னிலையிலும் திகழ்ந்தவர்.

இன்றைய அவரின் கம்பீரம், வேகநடை போன்ற சுபாவங்கள் அவரை ஓர் விளையாட்டு சாதனையாளர், (சம்பியன்) என்பதனை நிரூபிக்க,,,,

ஆன்மீகம், இறைநம்பிக்கையிலும் மிகுந்த பற்றுறுதி கொண்டவர். இயற்கையான உணவுகளில் நாட்டம் கொண்டு, பாரம்பரிய முறையில் சமைத்து, விரும்பி உண்ணும் இவருக்கு, இறைவனின் கொடை “உணவு மற்றும் போசனை வைத்திய நிபுணர்” அவர்கள் இவரின் வாழ்க்கை துணைவியானார்.

உணவு விடயத்தில் இவரிற்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல், வாழ்கையும், குழந்தைப்பேறும் பெற்றவர்.

வம்ச வழியில் மண்டூர் கந்தனின் ஆலய குலத்தின் வம்சாவழியாகவும், அங்கு உள்ள மடங்களில் ஒன்று இவர்களின் வம்சத்தின் பேரால் பராமரிக்கப்பட்டு அன்னதான நிகழ்வுகளும் நடைபெற உறுதுணையாக நிற்பவர்.

கல்முனை ஆதார வைத்தியசாலை யில் கதிரியக்கவியல் வைத்திய நிபுணராக கடமையை ஏற்ற இவர்.

இப்பிரிவின் நலிவு கண்டு மிக வேதனை கொண்டார். எனினும் இப்பிரதேச மக்களின் நலனுக்காக தொடராக பாடுபட்டு, வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களின் திட்டங்களுக்கு செயல்வடிவம் தர தன்னை அர்ப்பணித்து செயல்பட்டார்.

பலர் இங்கு வசதிகள் இல்லை என கொழும்பு சென்று மிகுந்த வசதிகளுடன் கடமையாற்ற, தன்னால் இவ்வாறு செய்யமுடியாது. நான் போகலாம், நான் வசதிகளுடன் வாழலாம், ஆனால் எமது மக்கள் கொழும்பு செல்வது எவ்வளவு கஷ்டம்? ஆகவே அந்த வசதிகளை நாம் இங்கு உருவாக்குவோம் என  தனிப்படவும், பலரிடமும் உதவிகள் பெற்று,

பல தடைகள் , விமர்சனங்கள், வீண்பழிகள் இவற்றையெல்லாம் கடந்து, நவீன கதிரியக்கவியல் பிரிவை முழுமை பெற செய்ய, என்ன என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் தாமாகவே ஆவணப்படுத்தி, தரவுகளை அடுக்கி இப்பிரிவை உயர்தரப்படுத்தியவர்.

அதுமட்டுமல்ல (“CT SCANNER”)  கணனிமயமாக்கப்பட்ட ரேமோகிராபி பரிசோதனை இயந்திரம் ஒன்றை நிறுவுவதற்காக, கட்டிடத்தின் அடிமட்டம் முதல் இவ் இயந்திரம் பதிப்பிற்கான தொழில்நுட்பம் வரை ஒவ்வொரு அசைவிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தி அவ் இயந்திரத்தை நிறுவும் வரை, பலர் உதவினாலும், அவர்களையும் ஊக்கப்படுத்திய பெருமை நிபுணர் ரிலக்குமார் அவர்களையே சாரும்.

இன்று கிழக்கிலங்கையில் ஓர் தரமான கதிரியக்கவியல் பிரிவு பல அம்சங்கள் உள்ளடக்கியதாக நவீனமயப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் திகழ்கின்றது எனின் அப்பெருமை இவரையே சாரும்.

அத்துடன் எதிர்கால “MRI  SCAN” (காந்த  அதிர்வு பட பரிசோதனை) இயந்திரத்திற்கான இட ஒதுக்கீட்டையும் செய்து முடித்துள்ளார் என்றே கூறலாம்.

தன் கதிரியக்கவியல் நிபுணத்துவத்துடன் தானும் தன் பாடும் என்று இல்லாமல் ஆன்மீக வழியில் கதிர்காம கால்நடை யாத்திரையை காட்டுவழியாக வருடம் தோறும் தவறாது சமயப்பணியாக செய்து முடிப்பது இவரின் சிறப்பியல்பு.

மிக பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று நடமாடும் SCANNER மூலம் நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து சிகிச்சையளிக்கும் மிக எளிமையான சுபாவம் கொண்டவர்.

எமது வைத்தியசாலையின் நடமாடும் வைத்தியமுகாம் சமூக சேவைப்பிரிவின் ஓர் அங்கமாக திகழ்ந்தவர்.

வைத்தியசாலையின் ஆலயத்தில் செயற்குழு தலைவராக இருந்ததுடன் ஆலயத்திற்கு தேவையான மரங்கள், செடிகள் என்பவற்றை எங்கு கண்டாலும் வாங்கி வந்து நட வழிவகுத்தவர்.

அதுமட்டுமல்ல அன்னதானங்களுக்கு பங்களிப்பு செய்வதுடன், தானும் ஓர் பக்தனாக அமர்ந்து அனைவருடனும் சேர்ந்து உண்டு மகிழும் பண்பாளர். இவர்

கல்முனை ஆதார வைத்தியசாலை யில் சேவையின் நாயகனாக திகழ்ந்துள்ளார் என்பது வெளிப்படை, உண்மையாகின்றது.

#மதிப்பிற்குரிய #கௌரவ #கதிரியக்கவியல் #நிபுணர் #அவர்களே !

நீங்கள் இடம் மாறினாலும் , நீங்கள் உருவாக்கிய சேவையின் நினைவுகள் அனைவரினதும் உள்ளங்களில் என்றும் விருட்சமாய் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் அடித்தளமிட்ட கட்டிட சேவை பலர் அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு உயரும். அந்த உயர்ச்சி உங்கள் தூரநோக்கையும், தன்னலமற்ற சேவையும் என்றும் அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு உயர்த்தும்.

இவ்வாறான உயர்ந்த சேவையாளர்களை கல்முனைநெற் ஊடக வலையமைப்பும் மிக உயரத்தில் வைத்தே நோக்குகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

கல்முனை பிராந்திய  மக்கள் சார்பாக உங்களுக்கான நன்றிகளையும் இச்சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கின்றோம்.