இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது;

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தல்

(அஸ்லம் எஸ். மௌலானா)

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக சுகாதார உதவியாளர் நியமனம் பெற்று, கடமையேற்க பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தலையை மூடிய ஆடையுடன் வருகைதந்த புதிய சுகாதார உதவியாளர்களான முஸ்லிம் பெண் ஊழியர்கள், ஆடை விதிமுறையை மீறியதாகக் காரணம் காட்டி அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டமை வேதனைக்குரியது.

தமிழ் பேசும் மக்களிடையே, இறுதியில் அனைத்து இலங்கையர்களிடையிலும் இனப் பிரிவுகளைத் தாண்டிய ஒற்றுமையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.

எமது மக்கள் நீண்ட காலமாக நிராகரித்த இனப் பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது- என்று அவர் தெரிவித்துள்ளார்.