டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பனவே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், வயோதிப பெண்ணிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள், கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.