துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செம்பிறை சங்கங்கள் உதவி செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் (06.02.2023) அதிகாலை முதல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இதன் காரணமாக, உயிரிழப்பு மற்றும் சேதங்கள் மேலும் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உயிரிழப்பு மற்றும் சேதங்கள்

அத்துடன, சீரற்ற காலநிலை, உட்கட்டுமான வசதிகள் சேதம் போன்ற பிற ஏதுக்களினால் சிரியா பகுதிகளுக்கு சென்று உதவிகளை வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் அவசர நிவாரணங்களை வழங்கியுள்ளது.

பல்வேறு உதவிகள்

அவற்றில், தங்குமிட வசதிகள், அவசர உதவிகள், முதலுதவி, மீட்பு, தேடுதல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு எடுப்பதற்காக REDOG நாய்களை அனுப்பி வைத்துள்ளதுடன், 23 அம்பியூலன்ஸ்களின் உதவியுடன் மீட்பு பணிகளும் முன்னெடுத்துள்ளது.

மேலும், துருக்கி முழுவதிலும் இரத்த தானம் வழங்குமாறு கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செம்பிறை சங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.