முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பாடநெறியை முடித்த 75 பேர் டிப்ளோ பட்டத்தைப் பெற்றனர்.

இந்த வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பாடங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்களின் மதிப்பீடு நடத்தப்படுகின்றது.

அதற்கமைய, அதில் இரா.சம்பந்தன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயகப் பொன் விருதைப் பெற்றார்.

நான்கு தசாப்த கால நாடாளுமன்ற வாழ்க்கையில் ஜனநாயகத்துக்காகச் சம்பந்தன் காட்டிய அர்ப்பணிப்பை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.