இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்
-பாறுக் ஷிஹான்-

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.

இதனடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்கவின் ஆலோசனையில் மும்முரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்நிகழ்வு நாடு பூராகவும் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன் போது இரத்ததான நிகழ்வு சுற்றுச்சூழல் சிரமதானம் பொலிஸாரின் நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான முன்னெடுப்பு களப்பரிசோதனைகள் ஆகியவற்றுடன் நாட்டுக்காக உயிர்நீர்த்த பொலிஸ் வீரர்களை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இயங்கி வருகின்றது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது 3 அரச நிறுவனங்களில் முக்கிய அரச நிறுவனமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் காணப்படுகின்றது. 1796 ம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப்பகுதியை கைப்பற்றியதன் பின்னர் முதல் தடவையாக இலங்கையில் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் 1866 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் திபதி ஜோர்ஜ் வில்லியம் ரொபின்சன் கெம்பல் முதல் பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து இலங்கை பொலிஸ் சேவை ஆரம்ப்பிக்கப்பட்டது.பின்னர் பொலிஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரா சேர் ரிச்சர்ட் அழுவிகாரே 1948 ம் ஆண்டு ஜனவரி 6 ம் திகதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சேவை உண்மையான இலங்கையர்களின் சேவையாக மாறியது.
பொலிஸ் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சமூக பிறழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக மக்களுக்காக பொலிசார் பாரிய பணியாற்றி வருகின்றனர்.