பாறுக் ஷிஹான்

நீண்டகாலமாக சொகுசு கார்களில்   சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை  கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(27) மாலை சாய்ந்தமருது  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பிரபல உணவகத்திற்கருகில்  விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சொகுசு காரில்  போதைப்பொருட்களுடன் பயணித்த  இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான நபர்கள் கல்முனைப்பகுதியை சேர்ந்த  44 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்கள்  என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ்  போதைப்பொருள் 6 கிராம் 80 மில்லிகிராம் மற்றும் ஹெரோயின் 5 கிராம் 580 மில்லி கிராம் உள்ளிட்ட 4 கைத்தொலைபேசிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன   விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்களான  எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான   பண்டார ( 13443)  செனவிரட்ன  ( 38499) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ்( 90699)பெரேரா  ( 71664) பிரேமதாச ( 35808)சாரதி ஜெயரட்ன ( 19786) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன்    பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.