ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடல்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து இன்றைய தினம் சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நடைபெறும் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பல்வேறு நிபந்தனைகளும், அமைச்சுப் பதவிகள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

அமைச்சுப் பதவியை ஏற்று ஆதரவளிக்க இணக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளின் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.