(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் சேவையை மேம்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு ஊழியர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ். சுபராஜன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.பி.எம். ஜெஸீர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி. பாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

தீ விபத்துகள் நிகழ்கின்ற சந்தர்ப்பங்களில் தீயணைப்பு பிரிவினர் உரிய இடங்களை சென்றடைவதில் தாமதம் காட்டப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூக ஊடகங்களில் எமது மாநகர சபை விமர்சிக்கப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஆணையாளர், பொது மக்களினதும் வர்த்தகர்களினதும் உயிர், உடமைகளை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்ற தீயணைப்பு பிரிவினர் மிகவும் பொறுப்புணர்வுடன் எந்த நேரத்திலும் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுடன் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் தவறிழைக்கும் ஊழியர்கள் யாராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் எச்சரித்தார்.

அதேவேளை தீயணைப்பு பிரிவில் நிலவும் வளங்கள் மற்றும் உபகரணத் தட்டுப்பாடுகளையும் ஏனைய குறைபாடுகளையும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் காணப்படும் குளறுபடிகளையும் தொழில்நுட்பக் கோளாறுகளையும் விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் பணிப்புரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.