கல்முனை மாநகர சபையில்
வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

(அஸ்லம் எஸ். மெளலானா)

கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 04 பொது நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று திங்கட்கிழமை (16) கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்ஸன், உள்ளுராட்சி உதவியாளர் சர்ஜூன் தாரிக் அலி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். டிவிப் நௌஷாட், நூலகர்களான ஏ.எஸ்.எம். முஸ்தாக், ஏ. சி. ஹரீஷா சமீம், ஏ.எச்.எம். தெளபீக், எஸ்.எம்.ஆர். அமீனுத்தீன் உட்பட நூலக உதவியாளர்கள், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியர் க. குணராசா ஆற்றிய சிறப்புரை ஒலிபரப்பப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் நூலகங்களை சிறந்த முறையில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்ற வாசகர்கள் பலர் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி, கெளரவிக்கப்பட்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் சேவைகளைப் பாராட்டி, 04 நூலகர்களும் இணைந்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.