கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025

கல்முனை கடற்கரை அருகில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவம் 02.06.2025 திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பம்.

உற்சவ காலத்தில் தினமும் மதியம் 1.00 மணிக்கும், மாலை 6.00 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனையை தொடர்ந்து இரவுப்பூசையும் நடைபெறும்.


07.06.2025 சனிக்கிழமை அம்மன் ஊர்வலம் வருதலும், 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கல்யாணக்கால் வெட்டுதலும், அலங்காரப்பூசையும் இடம் பெறும்.


09.06.2025 பிற்பகல் 1.00 மணிக்கு பூசை இடம் பெற்று மாலை 6.00 மணிக்கு விநாசகப்பானை வீதி வலம் வருதல் இரவு 8.00 மணிக்கு வட்டுக்குத்துதல் இரவு 11.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப்பூசையும் கண்ணகை வழக்குரை நிறைவும் அதிகாலை 1.00 மணிக்கு பொங்கல் ஆரம்பமாகி வைகறை 04.00 மணிக்கு சிலம்பொலி மங்கல உடுக்கொலி அம்மன் காவியத்துடன் திருக்குளிர்த்தி நிறைவு பெறும்.

02 – 06 – 2025 அ திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி இவ் வருட வைகாசித் திருக்குளிர்த்தியை கொண்டாடவிருக்கும் கல்முனை கடற்கரை கண்ணகி அம்மனை வாழ்த்தி வணங்கும கலைக்கொழுந்தன் ருத்ரா எழுதிய பா மாலை….

கடற்கரை கண்ணகியே !
கூவுகுயில் பசும் புங்கையில்
குலாவிடும் வசந்த வைகாசியில்
ஆவலாய் உன் தலம் கூடுவோம் !
அம்மையே உன் புகழ் பாடுவோம்.
காவலான தெய்வமே ! எங்கள்
கல்முனைக் கடற்கரை கண்ணகியே !

பூவகம் சூடினோம் உன் பாதம்
போற்றினோம். உன் சிலம்பின் வேதம்
பூவுலகெல்லாம் நீதி நிலைக்கப்
புரட்சி செய்த பெண் தெய்வமே !
தாவும் தீயாகித் தணிந்தவளே
தன் அடியானைக் காக்கத் துணிந்தவளே !

ஆண்டு தோறும் உன் தலமோ ஒரு வாரம்
தேவியே ! நாங்களெல்லாம் சரணாவோம் உன் பாதம்
நாவாலும் மனதாலும் உனையேதான்
நாளும் வணங்கும் நினைவேதான்.
வம்மி நிழலமர்ந்து மன
வருத்த வாதைகளெல்லாம் ஒப்பு வித்து
விம்மி அழுது தொழுபவர்கள் வாழ்வில்
வினையகற்றும் வித்தகியே !
கும்மி கோலாட்டம் குரவையோடு
கும்பிட்டு வரவேற்றோம் வாருமம்மா !
என்றென்றும் உனை நம்பும் நெஞ்சங்களை
இடரடையா வண்ணம் காருமம்மா !

வம்பு தும்பில்லா வையமதை
வடிவமைத்திட பிறந்தவளே !
செம்மையும் அன்பும் அறமும்
சிறக்க வைக்கும் சிறந்தவளே !
அம்மையே ! ஆதரிக்கும் குணத்தவளே !
அணுவளவும் உனை மறந்திரியோம் !
வேம்பிலையால் பந்தலிட்டு
விழாவெடுத்து மகிழ்ந்திடுவோம்.!

                        கலைக்கொழுந்தன் ருத்ரா ...
                        கல்முனை - 03