இன்று ஜனாதிபதிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இச்ச சந்திப்பு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதே வேளை

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

இதன்படி இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் 7,833 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அரச சேவைச் செலவினங்களுக்காக 3,861 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனையடுத்து வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பமானதுடன் இன்று அதன் 19வது நாளாகும்.

இன்றைய தினம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதுடன் அதன் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.