கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக சில அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு உள்ளதால் மக்களுக்கு தேவையான நிர்வாக சேவை வழங்குவதில் இடையூறு காணப்படுகிறது!

பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய கல்முனை வடக்கு செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் அரசாங்கத்தினால் முடியாதுள்ளது? என்று தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று (28.11.2023) உரையாற்றும்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சிங்களப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1989 ஆண்டு புதிய பிரதேச செயலர் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.

அத்துடன் 1993 இல் அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அங்கீகரிக்கப்பட்டு தனி பிரதேச செயலாளர் பிரிவாக அது உத்தியோகபூர்வமாக இயங்கி வந்தது.

காலப்போக்கில், முழுமையாக பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்குரிய கணக்காளர் போன்ற முக்கியமான நியமனங்கள் அதற்கென வழங்கப்படவில்லை அதேநேரம், அரசியல் காரணங்களுக்காக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவின்கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலம் உப பிரிவாகவே செயற்பட்டு வருகின்றது.

இதனால் மக்களுக்கு தேவையான நிர்வாகத்தை நடத்தமுடியாமல் உள்ளது அத்துடன், அரசியல் காரணங்களால் பழிவாங்கல்களும் நடைபெற்று வருகின்றன இதனால்;, கடுமையான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள்.

இனியும் தாமதிக்காமல் கணக்காளரை அரசு நியமிக்க வேண்டும்.

ஏற்கனவே வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்த முடிவை தற்போதாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.