பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பயன்படுத்தி டோபி, சொக்லெட் போன்ற உணவுகளை கொடுத்து பாடசாலை மாணவர்களை கடத்த முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமீப நாட்களாக சிறுவர்களை கடத்த முயற்சிப்பது தொடர்பான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் விசாரணையில் சில முறைப்பாடுகள் பொய்யானவை எனவும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் முயற்சிகள் தொடர்பான மற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சமூக ஊடகங்களில் பரவும் எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மற்றும் அந்த பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் இது தொடர்பில் பல தடவைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன், எவ்வித பொறுப்பும் இன்றி வெளியிடப்படும், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் இவ்வாறான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.