(அபு அலா)

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையின் பெண் கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனித்துளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் நூல் ஆய்வினை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும், நூல் அறிமுகத்தை பன்னூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர், நூல் நயத்தினை பிரபல எழுத்தாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜூல்பிகா ஷெரிப் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், இலத்தியவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கவிதாயினியின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் நூல் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.