சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது.

அப்போது முதல் கடந்த ஜனவரி 12ஆம் திகதி வரை கோவிட் பாதிப்பு காரணமாக சுமார் 60,000 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் கூறியிருந்தது.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

சீனாவில் உள்ள மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வைத்தியசாலைகளில் 681 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

11,977 பேர் கோவிட் பாதிப்புடன் இதர நோய்கள் காரணமாக உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்பு பட்டியலில், வீட்டில் இருந்தபடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

சீனாவில் தினசரி கோவிட் பாதிப்பு

சீனாவில் நேற்று (22.01.2023) கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் பயணம் செய்துள்ளனர்.

இதனால் சீனாவில் தினசரி கோவிட் பாதிப்பு 36,000 மாக எட்டும் என ஏர்பினிட்டி என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கோவிட் பரவலுக்கான தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

ஆனால் சீன சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் அடுத்த சில மாதங்களில், கோவிட் 2ஆம் அலை ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.