2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்லவும், வைத்திருக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்திகள் இந்த விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை சட்டத்தின்படி, கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இலத்திரனியல் சாதனங்களை பரீட்சார்த்திகளின் வசம் வைத்திருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது அனுமதி அட்டை இல்லாவிட்டாலும் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சை சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க 1911 அவசர தொலைபேசி இலக்கம், 0112 784 208, 0112 784 537, 0112 785 211 மற்றும் 0112 786 616 ஆகிய எண்கள் 24 மணிநேரமும் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.