(எம்.எம்.அஸ்லம்)

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை செவ்வாய்க்கிழமை (10) கூடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை பிற்பகல் 4.00 மணியளவில் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் கட்சியின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் உட்பட கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச அமைப்பாளர்களுக்கு கலந்து கொள்ளவிருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுவுவை புனரமைப்பு செய்யும் பொருட்டு, ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களுக்கு இக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.