கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது!

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS-UK) மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH -UK) என்பவற்றின் நிதி பங்களிப்பில் கர்ப்பினி பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கான “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு 28 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்தியட்சகர் இரா முரளீஸ்வரன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ந. ரமேஷ், உதவி வைத்தியட்சகர் ஜெ. மதன், குழந்தை நல வைத்திய நிபுணர் பிறேமினி, மற்றும் நிதி பங்களிப்பு வழங்கிய அமைப்புகளின் பிரதிநிதி கிறிஸ்ரி, வைத்தியசாலையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு நவபோச சத்துணவு பொதிகளை கல்முனை பிராந்திய தாய்மார்களுக்கு வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் வைத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் உரையாற்றுகையில் தற்போது உதவிகளை வழங்கிய இந்த அமைப்புகள் கடந்த கொரோனா காலங்களிலும் பல்வேறு உதவிகளை கல்முனை ஆதரவைத்தியசாலைக்கு வழங்கியதாகவும் அதற்கு தாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.