கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம்

நூருல் ஹுதா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் விசேட வைத்திய ஆலோசனை வழங்கப்படுவதோடு மார்பக சத்திர சிகிச்சையும் நடைபெறவுள்ளதாக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டபிள்யு.எம்.சமீம் தெரிவித்தார்.

கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் இந்த விசேட வைத்திய சேவை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதற்கான தனியான சேவை நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட மார்பக புற்றுநோய் பரிசோதனை நிலைய திறப்பு விழாவில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் உட்பட வைத்தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மார்பக புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படுகின்ற போது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நிலையை விடுத்து நோயை வெளிப்படுத்தும் வெட்கித்தல் காரணத்தினாலும் இந்த நோயினால் பாரதூரமாக விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலைமைகளில் இருந்து தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் ஆலோசனை சேவைகள் வழங்குவதற்கும் அவசர பரிசோதனைகள் நடாத்தி நோயின் அறிகுறிகள் பாதிப்பு குறித்து கண்டறிந்து அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளவதற்குமான நடவடிக்கை மேற்கொண்கொண்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.