இலங்கை அரசியல் அமைப்பில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை 43 வருடத்தை கடந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை போல் புகழ்பெற்ற சட்டமூலமாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம்.
பயங்கரவாத சட்டமூலம் தமிழ் மக்கள் மீதும் அவர்களது உரிமை போராட்டத்தை ஒழிக்கும் நோக்கில் தமிழர் மீது கண்மூடித்தனமா பாவிக்கப்பட்டதே நிதர்சனம்.
ஆனால் தற்பொழுது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தேவாலயங்களில் குண்டுவெடிப்புக்கு பின்னர் இஸ்லாமிய மக்களின் மீதும் காலிமுகத்திடல் போராட்டங்கள் பின்னுள்ள சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாவிக்கப்படுகின்றது.
தற்பொழுது இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் முன்னணியில் இருக்கின்றார்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்கள்.
தமிழர் மீது இச் சட்டம் பாவிக்கப்பட்டு எம் சந்ததி அனுபவித்த இன்னல்களை வார்தையால் வடிக்க முடியாத துயரம். அன்று இவர்கள் எல்லோரும் எங்கு போனார்கள். இன்று எண்ணிக்கையின் மாற்றமே இந்த மாற்றம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்.
அப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பிய பொழுது ஹக்கீமும் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசும் அவரது கட்சி உறுப்பினர்களும் இந்த திட்டத்தை இல்லாது ஒழித்தனர் என்பதே வரலாறு.
முஸ்லிம் அரசியல்வாதிகள் (முஸ்லீம் மக்களல்ல) தங்கள் தேவைக்கு ஏற்றவகையில் தமிழ் மக்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்கள் போல் தங்களது அரசியலுக்கு பாவிக்கின்றனர்.
அவர்களை போல் தன்மக்களுக்கான அரசியலை வழிநடத்தும் அளவுக்கு தமிழ் மக்களின் உரிமை அரசியல் தேவைகளை உணர்ந்து அரசியல் செய்ய இன்றைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதே வேதனையோடு கூடிய உண்மை இதற்க்கு நல்ல உதாரணம் இவ்வருடம் மாசி மாதம் இலங்கை முழுவதும் தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி மூலம் எடுத்த பயங்கரவாத சட்ட நீக்கும் கையெழுத்து வேட்டை … அன்று வைத்த கையெழுத்து வைத்த பேப்பரின் தலையெழுத்து இன்று மீண்டும் தேங்காய் உடைத்து பழைய தும்புதடிக்கு பட்டுக்குஞ்சம் ….ஹக்கீம் அவர்களும், சுமந்திரன் அவர்களும், சாணக்கியன் போன்றவர்களும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் தங்களின் கதிரைகளை தக்க வைப்பதின் ஒரு தொடர்ச்சி தான் பயங்கரவாத தடுப்புக்கு எதிராக உண்ணாவிரத, ஊர்தி போராட்டம் பல ஏமாற்று போராட்டங்கள்.
முகநூலில் மூலம் தலைவரின் படங்களை பிரசுரிப்பதின் மூலம் தான் தேசத்தின் பால் எங்களுக்குள்ள ஈர்ப்புத் தன்மையையும், உணர்ச்சியையும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் போராட்ட காலத்தில் ஈடுபாடுடன் இருந்து குடும்பத்தில் பல இழப்புக்களை சந்தித்த ஈழத் தமிழர்களுக்கு இல்லை.
தற்பொழுது தங்கள் சுயநலத்திற்க்கு உணர்ச்சி அரசியலை விதைத்து புதிய தலைமுறை இளைஞர்களை தூண்டிவிட்டு இதுதான் அரசியல் என்று போலி விம்பத்தை காட்டி அவர்களை முகநூல் போராளியாக்கி சிறைக்குள் தள்ளி ஆதாயம் தேடுவதும்.
அவர்களை விடுவிக்க பாடுபடுவது போல் பாசாங்கு செய்வது வாடிக்கையான வேதனை.இரண்டு வருடத்திற்கு மேல் புகைப்படத்தை பகிர்ந்த இளைஞர்கள் சிறையில் இருப்பதும் அதை தமிழ் அரசியல்வாதிகள் வாக்காக்குவதும் தொடர்கதையான விடயம் ……. குப்பிகள் கழுத்தில் தொங்கியும் அரசியல் கைதிகளாக பிடிபட்டது பிடிபட்ட போராளிகளின் துரதிஸ்டம்.
சிங்கள பேரினவாத அரசிடம் பிடிபடாமல் இருப்பதற்காகவே தான் கழுத்தில் சயனைட் குப்பி என்பதை வரலாறு கற்றுத்தந்த பாடம்.
46 தமிழ் கைதிகளின் விடுதலையும் வேண்டுமே தவிர அது மட்டும் தான் வேண்டும் என்ற தோற்றப்பாடு தான் ஆபத்தின் உச்சம் …..தப்பிச் செல்ல பல வழிகள் இருந்தும் தாம் எடுத்த கொள்கைக்காக தம் உயிரை மாய்த்த சரித்திர நாயக தியாகம் என்றும் எப்போதும் எம் பலத்தோடு கூடிய கௌரவம்.
குடும்பத்திலும் பல உயிர்களை போராட்டத்திற்காக காவு கொடுத்த நாங்கள் எங்களின் அரசியல் உரிமை நோக்கத்தை தாண்டி தற்போது அரசியல் கைதிகளின் விடுதலையில் மட்டுப்படுத்தப்படுவது கண்ணுக்கு தெரியாத சதிவலை அது எங்களது துரதிஷ்டமும் கூட …….”காந்திகம் வெல்லும் என்று கனவு கண்டு காந்தியிலும் ஒரு படி உயர்ந்த திலிபன்” அவர்களது வரலாற்று காலத்தில் அரசியல் காமடியங்களின் சித்து விளையாட்டில் ஒன்று இந்த அடையாள உண்ணாவிரதம்.
இப்படி மாற்றவர்களுக்கு சேவகம் செய்யவா நாம் உங்களுக்கு வாக்கிட்டோம். எம் அரசியல் உரிமைக்கு உங்களை அனுப்பினால் நீங்கள் ரணிலின் உரிமை, டலஸ்சின் வருகை, காலிமுக களியாட்டம் , நடுநிலைமை என்று திரிவது எவ்விதத்தில் நியாயம்.
இப்படியே செயற்பட்டால் வரும் காலங்களில் கடவுளால் கூட தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது. எம்மை உணர்சிபடுத்துவதை விடுத்து எம் உணர்வை மாற்றானுக்கு உணர்த்தும் வடிவத்தை தேடவும். இது குறையல்ல நியத்தை தேடுவதற்கான நிதர்சனம்.
குருநாதன் பிரதீபன் இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலை
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2022/09/IMG-20220917-WA0042.jpg)