இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சமந்தா பவர், சீனா வழங்கிய வெளிப்படைத்தன்மையற்ற கடன் உதவி குறித்து தனது அதிருப்தியையும் தெரிவிக்கவும் மறக்கவில்லை.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சமந்தா பவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை வழங்கியதற்காக இந்தியாவுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியில் இலாப நோக்கற்ற திட்டங்கள்.

இதேவேளை, கடனுதவி வழங்குவதன் ஊடாக, சீனா இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும், 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, இலங்கைக்கான கடன்களை வழங்குவதில் சீனா பிரதானமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள வெளிப்படைத்தன்மையற்ற கடன்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மூலம் இலங்கை ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதாக சமந்த பவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பன இலாப நோக்கற்ற திட்டங்களாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா சாதகமாக பதிலளிக்காது

மேலும் பேசிய சமந்த பவார், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான காரணியாக இருக்கும் சீன கடனை மறுசீரமைப்பதில் சீனா சாதகமாக பதிலளிக்காது என சந்தேகம் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் சீனா செய்ய வேண்டியது, இருக்கும் கடனை அடைக்க அதிக கடன்களை வழங்குவது அல்ல, ஆனால் ஒரு சலுகை காலத்திற்கு ஏற்ப கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவது என்று அவர் கூறினார்.

தற்போது இலங்கையின் மொத்த கடனில் சுமார் 15 வீதத்தை சீனா வைத்திருப்பதாகவும், சீனாவின் நடவடிக்கைகளில் இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் தங்கியிருப்பதாக சமந்த பவர் மேலும் தெரிவித்தார்.