(நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்)
உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா இன்று (26) கல்முனை நகரில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப மற்றும் முடிவுரையை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் செயலாளர் முபாரிஸ் எம். ஹனீபா நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை தாங்கிய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், அஹ்லுல் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜலீல்(பாகவி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி), கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்வில் உலமாக்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது சர்வமதத் தலைவர்களின் சிறப்பு உரைகளும் இடம்பெற்றன. இன, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்ற இவ்வுரைகள் நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தன.
மீலாதுன் நபி பெருவிழாவின் சிறப்பு மார்க்க சொற்பொழிவை மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் நிகழ்த்தினார். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, பண்புகள், மனிதநேயம், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், குர்ஆன் மத்ரஸா மாணவரின் ஆங்கில உரை, முஸ்லிம் கலாசார நிகழ்வு, இஸ்லாமிய பைத் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் மார்க்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கல்முனை நகரில் பள்ளிவாசல் நிர்வாகம், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்வைக்கிய மீலாதுன் நபி பெருவிழா, சமூக நல்லிணக்கம், சமய ஒற்றுமை மற்றும் மக்களிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
























