ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு இராச்சியம் துண்டித்துள்ளது.

தெஹ்ரானிலுள்ள தூதரகம் மூடப்பட்டதுடன், தூதுவர் உட்பட அனைத்து இராஜதந்திரிகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 58 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரானால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும், பிராந்தியத்தின் பாதுகாப்பு கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரித்துள்ளது.