(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது நாங்கள் ஏற்கோம் .
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி செயலாளரும், கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி அருள்.நிதான்சன் தெரிவித்தார் .
கல்முனை ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற அவசர ஊடகச் சந்திப்பில் பேசுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கே அவர் மேலும் தெரிவிக்கையில்..
அம்பாறையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் குறித்த இக் கூட்டத்தினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடாத்த ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு இன்று மாவட்ட அரசாங்க அதிபரால் சம்பந்தப்பட்ட சகலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தினை இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் நாங்கள் முற்றாக அத் தீர்மானத்தை எதிர்க்கிறோம்.
2015 ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட
நல்லாட்சி அரசாங்கத்தில்கூட மேற்படி தமிழ் முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கான
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் தனித்தனியாக நடைபெற்றன.
ஹரிஷ் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந் நியமனத்தை வழங்கியிருந்தார். இதுவரை காலமும் தனித்தனியாக இக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை கல்முனை மக்கள் கடந்த பல தசாப்த காலமாக,வடக்கு பிரதேச செயலகம் கோரி பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்ற இவ் வேளையில் இத் தீர்மானத்தை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.
இன்று இலங்கையினுடைய மேல்முறையீட்டு நீதிமன்றத்திலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கும் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இன்று அவற்றை இணைத்து ஒரு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு எண்ணுவது என்பது ஒரு தவறான செயல்.
இவ்வாறான விடயம் ஆனது எங்களுக்கு பெ ரும் கவலை அளிக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எமது செயலக அதிகாரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறதா? எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறிச் செயல்படுகிறதா? கல்முனையில் அரச சார்பு தமிழர்கள் அவமானம் !
எதுவானாலும் தனித்தனியாகவே குறித்த கூட்டம் நடைபெறவேண்டும். என்றார்.