“ஒஸ்கார்” அமைப்பு மிகவும் பின்தங்கிய கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும், பாதணிகளையும் வழங்கி வைத்தது.

“ஒஸ்கார்” ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் ( ராஜன்) வழிநடத்தலில்,  பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தியின் வேண்டுகோளுக்கமைவாக, “ஒஸ்கார்” அமைப்பின் போசகர் பொறியியலாளர் வே.சிவசுப்பிரமணியம் இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு , மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  இன்று  ( 17) செவ்வாய்க்கிழமை  அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

சிறப்பதிதிகளாக ஒஸ்கார் பிரதிநிதிகளான ஆசிரியர் ஆர்.இரத்தினகுமார் சமூக செயற்பாட்டாளர் ஏ.ஆனந்தசசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒஸ்கார் சார்பில்  ஏ.ஆனந்தசசு மற்றும் ஆ.கவிஸ்சரண் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் சப்பாத்து பாடசாலை பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஏலவே பாடசாலையின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த ஒலிபெருக்கி சாதனத்தையும் ஒஸ்கார் அமைப்பு வழங்கி வைத்தமை தெரிந்ததே.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 ஒஸ்கார்  அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான செயலாளர் தி.லாவண்யன், பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தி உள்ளிட்ட ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல  சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் கடந்த பல வருடங்களாக செய்து வருகின்றார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வருடம் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் பெருமளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக ஒஸ்கார் தெரிவித்துள்ளது.