இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!
தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது நாளை மறுநாள் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் திறக்கப்படும்.
காட்டுப் பாதை திறப்பதற்கு இன்னும் 02 தினங்கள் இருக்கையில் அப் பாதை பயணிப்பதற்கு உகந்ததாக காட்சியளிக்கிறது என நேற்று முன்தினம் அங்கு நேரடியாக சென்று வந்த சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தெரிவித்தார்.
தொண்டு நிறுவனங்களும் அப் பாதையின் இன்றைய சீரான நிலை பற்றி அறிவித்துள்ளது.
கதிர்காமப் பாதயாத்திரீகர்கள் தங்கும் முதலாவது இடைத்தங்கல் பிரதேசமான வாகூர வெட்டை , கிணற்றடி (வண்ணாத்தி வெட்டை) பகுதியில், கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றன. ஆனால் அவையெல்லாம் வற்றி இன்று உவப்பானதாக உள்ளது.
அங்குள்ள கிணறுகளும் நேற்று முன்தினம் தொண்டு நிறுவனங்களால் நீரிறைத்து சுத்தமாக்கப்பட்டுள்ளன.
மேலும், கிழக்கு ஊவா மாகாண எல்லையில் உள்ள குமுக்கன் ஆற்றின் ஓட்டமும் கடந்த வாரங்களில் கணிசமாக அதிகரித்து காணப்பட்டதாயினும தற்போது முகத்துவாரம் ஊடாக நீர் வழிந்து ஓடுவதாகவும் சில நாட்களில் நீர் ஓட்டமும் மேலும் குறையக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறுத்தைகளின் பெருக்கமும் நடமாட்டமும் வழமைக்கு மாறாக அதிகமாக காணப்படுகின்றமை முக்கியமாக கவனிக்கக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது. தாம் அவற்றை நேரடியாக கண்டதாகவும் சங்கர் ஜீ கூறினார்.
எது எப்படியோ காலை இரவு நேரங்களில் மற்றும் அதிகாலை வேளைகளில் காட்டுவழிகளில் நடமாடுவதைக் கூடுதல் கவனத்துடன்
கையாளவேண்டுமென்று தொண்டர் அமைப்புகள் கேட்டுள்ளன.
இத் தகவல்கள் யாரையும் பீதியடைய வைப்பதற்காக அல்ல, மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பதிவு செய்யப்படுகிறது.






