போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. -திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்-

வி.சுகிர்தகுமார்                 

 போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. தமிழ் இனத்திற்காக சர்வதேச ரீதியில் போராட நான் தயாராகவுள்ளேன்.
எனது கருத்தை திரிவுபடுத்தி எனக்கெதிராக மக்கள் சக்தியை திரட்டும் பொருட்டு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயினும் இப்பிரதேச மக்கள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை என்பது தெளிவாகின்றது என திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் கூறினார்.


நேற்று (16) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இன்று (17) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களை தவிர்த்து மத்திய அரசுக்கு செய்திகளை சொல்லும் பொருத்தமான இடங்களில் ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு நானும் சேர்ந்து உதவி செய்வேன்.


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எதிராக நான் ஒருபோதும் பிரசாரம் செய்யவில்லை. அவர்களும் எங்கள் உறவுகளே
தமிழ் இனத்திற்காக சர்வதேச ரீதியில் போராட நான் தயாராகவுள்ளேன்.
அரசியல் இலாபத்திற்காக போராட்டம் செய்வதை நான் விரும்பவில்லை
அரசியல் இருப்பிடத்தை தக்க வைப்பதற்காக சில விஷமிகள் தலைமை தாங்கி பின்னாலிருந்து ஆர்ப்பாட்டங்களை வழி நடத்துகின்றனர்.
போராட்டங்களை நடத்துகின்றவர்கள் ஏன் இதுவரையில் முறையாக வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பது கேள்விக்குறியே.


இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வு தமிழ் மக்களின் விடுவிக்கப்படாத காணிகள் விடுவிப்பு தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகளுக்கான நடவடிக்கை எல்லாம் இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.


கடந்த காலத்தில் சிறைவாசம் அனுபவித்து துயரங்களை சந்தித்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தகுதியானவர்கள்.


இதனை விடுத்து போராட்டங்களின்; நோக்கத்தினை திசை திருப்பி செல்கின்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் போராட்டத்தினை மீள் புனரமைப்பு செய்து நீதியை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


வெறுமனே உலக நாடுகளுக்கும் இங்கிருப்பவர்களுக்கும் காட்டுவதற்கு மாத்திரம் போராட்டங்கள் அமையக்கூடாது என்றார்.