முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சரான நலின் பெர்னாண்டோ ஆகியோர் எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக கரம்போர்ட் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) அறிவிக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான அதன் தலைவர் பிரதீப் ஹெட்டியாரச்சி, பிரதீப் அபேரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2014 செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 14,000 கரம்போர்ட்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரண இறக்குமதியின் போது 53.1 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 06 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 70ஆம் சரத்தின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
நலின் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜரானதுடன் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷானக்க ரணசிங்க ஆஜரானார்