பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்   கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும்  14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு சனிக்கிழமை(15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடல்தொழில் மேற்கொண்டு வருவதுடன் மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொண்டு வருபவராவார்.


மேலும்   கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு   பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அத்துடன்    கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின்  வழிகாட்டுதலில்   குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.