கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.18 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் குருதி சுத்திகரிப்பு பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. N.மனோஜினி வழங்கியதோடு தலைமை உரையினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வழங்கியிருந்தார். மேலும் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. M. N. M. சுவைப் சிறுநீரக நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. அவர் தனதுரையில் சிறுநீரகத்தின் தொழிற்பாடு, அதனுடன் தொடர்புபட்ட நோய்கள், அறிகுறிகள் முக்கியமாக இதற்கான சிகிச்சை முறைகள் மருந்துகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக விவரித்தார். இதனை தொடர்ந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு. சந்திரகுமார் அவர்களினால் சிறுநீரக நோயினால் பாதிப்புற்றோருக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவிகள், இலவச கொடுப்பனவுகள் அவற்றை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் என்பன பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. மேலும் வைத்தியசாலையின் போஷணையாளர் திரு. சாமில் பௌஷாத் அவர்களினால் எவ்வாறான உணவுபழக்கங்களினால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது மற்றும் சிறுநீரக நோயை ஏற்படுவதை தடுக்க எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற பலவகை விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் இறுதி நிகழ்வாக, நன்றியுரையினை குருதி சுத்திகரிப்பு பிரிவு தாதிய உத்தியோகத்தர் திரு. T. உதயதாஸ் ஐயர் அவர்களினால் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது. மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தாதிய பரிபாலகர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள், சிறுநீரக நோயாளிகள், மற்றும் நோயாளிகளின் உறவினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. N.மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.