கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக வாய்வழி சுகாதார தின நிகழ்வு(World Oral Day – 2024)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக வாய்வழி சுகாதார தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.20 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வரவேற்புரையினை பல் வைத்தியநிபுணர் Dr. S. S. U. ஷி(f)பா அவர்கள் வழங்கியதோடு, தலைமை உரையினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வழங்கியிருந்தார். மேலும் வைத்தியசாலையின் பல் வைத்திய நிபுணர் Dr.I. M. I.முன்ஷிப் அவர்களினால் பற்சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. அவர் தனதுரையில் பற்களின் முக்கியத்துவம், பற்களில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள், வாய் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள், பல் துலக்கும் சரியான முறைகள், பற்சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றி விளக்கமாக விவரித்தார்.

மேலும் இறுதி நிகழ்வாக, நன்றியுரையினை பற்சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. V.சுதானந்தி அவர்களினால் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது. மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் Dr. J. மதன், வைத்திய நிபுணர்கள், பல் வைத்திய நிபுணர்கள், தாதிய பரிபாலகர்கள், வைத்திய அதிகாரிகள், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள், கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. N.மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.