(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் நிலைமைகளை ஆராய்ந்தபோது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை அவர் விடுத்துள்ளார்.
இதன்போது பூங்காவை மேலும் ஒளியூட்டும் வகையில் தேவையானளவு பிரகாசமான மின் விளக்குகளை உடனடியாக பொருத்துமாறும் மலசல கூடங்கள் மற்றும் நீர் வசதிகளை ஒழுங்குபடுத்தி, செயற்படுத்துமாறும் மின்சாரக் கட்டமைப்புகளில் காணப்படும் குளறுபடிகளை சீரமைக்குமாறும் மாநகர ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாடும் பகுதிகளை அவர்களின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, முறையாக சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார்.
இக்கள விஜயத்தில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் அஹ்சன் மனாஸிர், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.








