ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அது தொடர்பில் இன்னமும் நாம் யோசிக்கவும் இல்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஒருசில தமிழ்க் கட்சிகள் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதுபோல் நாம் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது.

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ, அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம். முதலில் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்பு வரட்டும். அதன்பின்னர் அது பற்றி யோசிப்பம்.” – என்றார்.