பாறுக் ஷிஹான்

நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் கல்முனை  சட்டத்தரணிகள் சங்கம்  மேற்கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் இன்று(11)  ஒன்று கூடிய சட்டத்தரணிகள்  பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் சுலோகங்களில் பல்வேறு வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை  நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை  சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.