கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பி வருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (02.03.2023) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கருத்து தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாகப் புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது.

நடவடிக்கை

இந்த விடயத்தின் பின்னணியில் யார் இருப்பினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கமைய ஆணையாளர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, நிதி கையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.

மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோசன் அக்தர் கூறியதாவது, மாநகர சபையில் இடம்பெற்ற நிதிக்கையாடல் விடயங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிலர் காழ்ப்புணர்ச்சியினால் பொதுவெளியில் பேசி வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு அவர்கள் தப்பிச் செல்லாத வகையில் பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை பெற்று நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

எனவே, எமது கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு சேறு அடிப்பதற்குச் சிலர் சோடிக்கப்பட்ட கதைகளைப் பரப்பி வருவதானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓப்பானது எனத் தெரிவிக்க விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

நிதி கையாடல்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி சத்தார் குறிப்பிடுகையில், கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பிவருகின்றார்கள்.

ஆனால் மாநகர சபையில் ஒரு நிதி கையாடல் இடம்பெற்றிருக்கின்றது. மாநகர நிதிப்பிரிவில் இருந்த ஊழியர்களினால் இடம்பெற்றுள்ளது.

இந்த ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டில் எமது முதல்வருக்கோ எமது உறுப்பினர்களுக்கோ எவ்விதமான சம்பந்தமும் இல்லை. 5 வருடங்களாகச் சபையை நாம் வழிநடத்துகின்றோம்.

ஒவ்வொரு வருடம் கணக்காய்வு பிரிவினர் வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள். மத்திய அரசு மாகாண அரசிலிருந்து இவர்கள் வருவார்கள்.

4 முதல் 5 தடவை இவ்வாறு வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள். அவர்களது அறிக்கையைத் தான் நாங்களும் நம்பலாம். நாங்கள் உட்பட எமது முதல்வர் கூட வரிப்பணம் மேற்கொள்கின்ற இடத்திற்குச் சென்று பார்க்க முடியாது.

இதற்காகக் கணக்காளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும்

அவர்கள் அதை ஒழுங்கு படுத்துவார்கள். நிர்வாகத்தில் ஏற்படுகின்ற களவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள். எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் சேறு பூசுகின்றார்கள். இது அரசியலில் எடுபடாது. ஏனெனில் கடந்த 23 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாநகர சபையை வழிநடத்தி வருகின்றது.

இன்னும் 40 முதல் 60 வருடங்களுக்குக் கூட கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தர் ஏ.சி.சத்தார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.