(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு நகர் பகுதி அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி ஒருவரை 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (ஜனவரி,1) பிற்பகல் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய சம்பவதினமான நேற்று பகல் சவுக்கடி பகுதியில் களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பை மேற் கொண்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மட்டக்களப்பில் இருந்து சவுக்கடி பகுதிக்கு வியாபாரத்துக்காக போதை பொருளை கொண்டுவந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் வியாபாரியை மடக்கி பிடித்தபோத அவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன் மோட்டர்சைக்கிளை கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவரையும் சான்று பொருட்களையும் ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.