நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள் மொட்டுக் கட்சிக்கும், 5 அமைச்சுக்கள் ரணில் விக்ரமசிங்க விரும்புகின்றவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் முதல் கட்டமாக மொட்டு சார்பில் பவித்ரா வன்னியாராச்சிக்கும், ஜனாதிபதியின் சார்பில் ஜீவன் தொண்டமானுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மொட்டு சார்பில் இன்னும் 6 பேருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன.

புதிய அமைச்சர்கள்

அவற்றுள் ரோஹித அபேகுணவர்தன, ஜோன்சன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.

இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்றும், மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது என்றும் கூறி வந்த ஜனாதிபதி இப்போது முடிவை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி சார்பில் இன்னும் நால்வருக்கு வழங்கப்படவுள்ளன. அவர்களுள் வஜிர அபேவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஏனைய இரண்டில் ஒன்று ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்டங்கட்டமாக நியமனம்

இது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ராஜித அதை மறுக்கவில்லை. இருந்தாலும், தனியே சென்று அரசில் இணையமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஏனைய ஒன்று அரசில் உள்ள ஜனாதிபதியின் நெருக்கமான ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. பஸில் ராஜபக்ச பிரயோகித்த கடும் அழுத்தம் காரணமாகவே இந்த நியமனம் ஆரம்பமாகியுள்ளது என்று அறியமுடிகின்றது.

ஒரே நேரத்தில் எல்லா அமைச்சர்களையும் நியமித்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் கட்டங்கட்டமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

இதற்குப் பஸிலும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாகவே பவித்ராவும் ஜீவனும் முதலில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.