வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது.

2 ரூபாய் ஊக்கத்தொகை

எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.

இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 311,269 பேர் வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றாலும், முன்னைய ஆண்டின் 5.2 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் சட்டபூர்வமான வலையமைப்புகளின் ஊடாக அனுப்பும் தொகை 36 சதவீதம் சரிந்து 3.3 பில்லியன் டொலராகளாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.