அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இப்போது கோரப்பட்டாலும் கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.

8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக அல்லது 5 ஆயிரமாகக் குறைக்கும் நோக்கில் எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்பதால் 6 மாதங்களுக்குத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரச தரப்பு தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.

இதவேளை, இந்தத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்திப்போடுமாறு மொட்டுக் கட்சி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் பிரதானமாக 5 கூட்டணிகள் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளன. ‘மொட்டு’, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் தலைமையிலேயே இந்தக் கூட்டணிகள் உருவாகவுள்ளன.

சிலவேளை, இந்தக் கூட்டணிகள் மூன்றாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.

அதாவது மொட்டு – ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி – சுதந்திரக் கட்சி கூட்டணி ஆகியவை உருவாவதற்கு வாய்ப்புண்டு. அவ்வாறு உருவானால் கூட்டணிகள் மூன்றாக மாறும்.