கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) 

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரக கடமையாற்றிவரும் அக்கரைப்பற்iறு 7ம் பிரிவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான  52 வயதுடைய ஆறுமுகம் சசீந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு  வீடு நோக்கி காரை சம்பவதினமான இன்று பகல் ஒரு மணியளவில் தனியாக காரை செலுத்தி வந்துள்ள நிலையில் நிந்தவூர் மாட்டுபாளையம் வீதி வளைவில் கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் 1919 அவசர சேவை பிரிவு அம்பிலன்ஸ் வண்டியில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் இடை நடுவில்  உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.