22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏ பிரிவு – கட்டார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சி பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவு – பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

இ பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

ஜி பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2 ஆம் திகதியுடன் லீக் சுற்றுக்கள் முடிவுற்று அதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2 ஆவது நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அரை இறுதி போட்டிகளும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தொடக்க நாளான இன்று, ஏ பிரிவில் உள்ள கட்டார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டிக்கு முன்னர் இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலகோர் அல்பயத் விளையாட்டரங்கில் நடைடிபெறவுள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து போட்டியில் ஏற்கனவே சம்பியன் பட்டம் வென்ற அணி உலகக் கிண்ணத்தை வெல்லுமா? அல்லது புதிய அணி கிண்ணத்தைக் கைப் பற்றுமா? என்ற அனைத்து கால்பந்து ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.