ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 10 நாடுகளின் ஆதரவை கூட இலங்கை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரேரணைக்கு ஆதரவான 26 நாடுகள் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதாக ஜெனீவாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, தற்போது அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா, சுவிடன், துருக்கி, இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 26 நாடுகள் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரேரணை வாக்கெடுப்பு

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் A/HRC/51/L.1 தீர்மான வரைவு நாளை மறுதினம் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை உருவாக்கியுள்ளன.

இந்த பிரேரணையின் மூலம் இலங்கையில் மனித உரிமைகள் உட்பட பல விடயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஜெனிவா செல்லும் இலங்கை குழு

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமர்வுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பில் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டால் இலங்கை தரப்பு தோற்கடிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.