சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை அதிகாரிகள் குழு கடந்த வாரம் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததுடன் பேச்சுவார்த்தை நேற்று (31ம் திகதி) முடிவடைந்தது.

இதன்படி, நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (01) முற்பகல் 11.00 மணிக்கு மத்திய வங்கி தலைமையகத்தில் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவுள்ளது.

மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடத் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை ஒப்பந்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகம் மற்றும் அதன் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.