(அஸ்லம் எஸ்.மௌலானா,
எம்.என்.எம். அப்ராஸ்)
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தின் திறப்பு விழாவும் உள்ளக விளையாட்டரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பண விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றன.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் அழைப்பின் பேரில் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் என்.எம். நௌபீஸ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உள்ளிட்ட அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளால் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டு, மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சர் கட்டம் கட்டமாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
உள்ளக விளையாட்டரங்கின் ஆரம்ப வேலைத் திட்டம் தொடர்பாக கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் அவர்களிடம் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அது தொடர்பான கோவையினையும் பெற்றுக் கொண்டார்.
இதன் அடுத்த கட்ட நிர்மாணப் பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே அவர்களினால் 104 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியாக அமைச்சர் சுனில் கமகே, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோருக்கு விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.















