40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நடவடிக்கை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், திட்டமிடப்பட்ட பொறிமுறையைப் பயன்படுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் இவரைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுப்பு
கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர கவனஞ்செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பல அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

