பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உணவகத்தில் காலை வேளையில் திடீரெனத் தீ பரவியதையடுத்து, அங்கிருந்தவர்களும் பிரதேசவாசிகளும், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இத்தீவிபத்து தொடர்பில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்ட போதிலும், வழமை போன்று தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரின் இத்தகைய தொடர்ச்சியான தாமதமான வருகை மற்றும் மந்தமான செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் தீவிர அதிருப்தி நிலவி வருகின்றது.
இவ்வாறான விபத்துச் சமயங்களில் விரைந்து செயற்படும் வகையில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்புச் சேவையை வினைத்திறனுள்ளதாக மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இத்தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளைப் சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்







