பாறுக் ஷிஹான்

“1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, புதன்கிழமை (23) மாலை கல்முனை   பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன் –

மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது

“1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும். 43 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் குறைந்தது 3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும், சொத்துக்களும் முற்றிலும் சூரையாடப்பட்டன.

அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக அழிக்கும் முனைப்புடன் அன்றைய ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர்   ஆ. தர்மதாச (தொண்டமான்) தமிழரசுக் கட்சியின் கல்முனை  தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன் ,ஈபிஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்)  உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.