அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் செயல்திறன் மற்றும் நீண்டகால விமானச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த விமானத் தொகுதி, விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை வந்தடைந்துள்ள ஹெலிக்கொப்டர்கள் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர், அவை உத்தியோகபூர்வ சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
குறித்த ஹெலிக்கொப்டர்கள் விமானி பயிற்சிகள், தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பல்வேறு மனிதாபிமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நன்கொடை, அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
